Labels

Wednesday, 19 February 2020

சித்தர்களின் பரிபூரணம் அருள் கிடைக்கும்.

18 சித்தர்களின் மந்திரத்தை எவர் ஒருவர் ஜெபிக்கிறாரோ அவருக்கு சித்தர்களின் பரிபூரணம் அருள் கிடைக்கும்.

1 ) அகத்தியர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி

போகர் மூல மந்திரம்

ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி

திருமூலர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி

இடைக்காடர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி

கருவூரார் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி

கோரக்கர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி

குதம்பை சித்தர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி

பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி

சட்டைமுனி மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி

10)  சிவவாக்கியர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி

சுந்தரானந்தர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி

கொங்கணர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி

வான்மீகர் மந்திரம்

ஓம் வான்மீகர் திருவடிகள் போற்றி

கமலமுனி மந்திரம்

 ஓம் கமலமுனி திருவடிகள் போற்றி

15 ) மச்சமுனி மந்திரம்

ஓம் மச்சமுனி திருவடிகள் போற்றி

பதஞ்சலி மந்திரம்

ஓம் பதஞ்சலி முனிவர் திருவடிகள் போற்றி

இராமத்தேவர் மந்திரம்

ஓம் இராமத்தேவர் திருவடிகள் போற்றி

18 ) தன்வந்த்ரி மந்திரம்

ஓம் தன்வந்த்ரி திருவடிகள் போற்றி

மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் அவர்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழிபிறக்கும். ஒரு முறையாவது உங்கள் சித்தர் ஜீவ சமாதி நேரில் சென்று ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதாமாதம் உபவாசம் இருந்து வணங்கிவந்தால் பல மாறுதலான வாழ்வு தங்களுக்கு அமையும்.

வெகு தொலைவில் சில ஜீவ சமாதிகள் அமைந்துள்ளதால் அங்கு சென்றுவர இயலாதவர்கள் வீட்டிலேயே ஒரு வெள்ளை விரிப்பின்மீது அமர்ந்து உங்கள் சித்தரின் பெயரை உச்சரித்து முடிந்தால் அவரின் மந்திரங்களைக்கூறி தியானம் செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

மேலும் அறிக : திதியில் பிறந்தவர்களே அனைவரும் திதி இல்லாமல் விதி அமையாது. உங்கள் நட்சத்திர நாளை பார்த்து பூஜிக்க முடியாவிட்டாலும் உங்கள் திதி நாளில் பூஜிக்கலாம். அதுவும் முடியாவிட்டால் அமாவாசை பௌர்ணமி திதிகளில் வழிபாடு செய்யலாம். சில சித்தர்களின் ஜீவ சமாதி எங்குள்ளது என்று தெரியாமலேயே இருக்கிறது. சிலர் அங்குள்ளது இங்குள்ளது எனவும் தன் ஊரை வளர வைக்க எத்தனித்து இங்குதான் சமாதி உள்ளது. ஓலைச்சுவடி ஆதாரம் உள்ளது என ஒரு கதையையும் உருவாக்கிய சம்பவம் நிறைய உள்ளது. எது எப்படியோ நம்பிக்கையே தெய்வம். அந்த நம்பிக்கையோடு இருக்கும் இடத்தை நாடிச்சென்று வழிபாடு செய்யுங்கள்.

சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக அனைவருக்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும் பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். கீழே எந்தெந்த நட்சத்திரத்தில் சித்தர்கள் பிறந்தார்கள் அவர்கள் ஜீவ சமாதி எங்குள்ளது. அவர்களுக்கான மந்திரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்தி வளம் காணுங்கள்.

அசுவினி:

நட்சத்திர சித்தர் பெயர் காளங்கிநாதர் ஆவார். இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்குபெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும். ஓம் குருவே சரணம் என மூன்றுமுறை கூறி ஓம் ஸ்ரீ காளங்கி நாதர் சித்த குருசுவாமியே சரணம் சரணம் என முடிந்தளவு மனம் விரும்பும் வரை கூறலாம். மற்ற நட்சத்திரக்காரருக்கும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தர் பெயரை சேர்த்துக்கொள்ளவும்.அடுத்து

பரணி:

 நட்சத்திரம் சித்தர் போகர் ஆவார். இவர் பழனி முருகன் சன்னதியில் சமாதி உள்ளது.

கிருத்திகை:

நட்சத்திரம் ரோமரிஷி சித்தர்ஆவார். இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரே கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.

ரோகிணி:

நட்சத்திரம் சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.

மிருகசீரிடம்:

நட்சத்திரம் சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். ஊர் திருவரங்கம் ஆகும். சில நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இரண்டு சித்தர் வருவர்.

திருவாதிரை :

 நட்சத்திரம் சித்தர் இடைக்காடார் ஜீவ சமாதி திருவண்ணாமலை.

புனர்பூச:

நட்சத்திரம் சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைதீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர்.

பூசம்:

 நட்சத்திரம் கமல முனி சித்தர் ஆவார். இவர் திருவாரூர் என்ற ஊரில் ஜீவ சமாதி உள்ளது.

ஆயில்யம்:

நட்சத்திரம் இதற்கான சித்தர் அகத்தியர். இவர் ஒளிவட்டம் குற்றால பொதிகைமலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரம் இங்கு உள்ளது.

மகம்:

நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது. பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும்.

பூரம்:

நட்சத்திரம் இவர் சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவி அம்சமாக உள்ளார். இவரை வணங்க ஏற்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமே.ஏனெனில் இவர் தோன்றிய இடமே அங்குதான். அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவர் மாற்று பெயர் யாகோப்பு என்றும் உள்ளது. இவர் ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளி வந்துபோகும் இடம் அழகர் மலையாகும். இவரை வழிபட நம் நாட்டினர் அழகர் மலைக்குத்தான் செல்கிறார்கள்.

உத்திரம்:

நட்சத்திரம் இதில் அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் திருச்சி உறையூரில் உள்ளது.

அஸ்தம்:

நட்சத்திரம் சித்தர் கருவூரார் ஆவார். இவர் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும்.

சித்திரை:

நட்சத்திரம் இதற்கான சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.

சுவாதி:

நட்சத்திரம் இதற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது.

விசாகம்:

நட்சத்திரம் இதற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி உள்ளது.

அனுஷம்:

 நட்சத்திரம் சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவராவார். இவர் எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.

கேட்டை:

நட்சத்திரம் இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார்.

மூலம்:

நட்சத்திரம் இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது.

பூராடம்:

நட்சத்திரம் இதற்கான சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது.

உத்திராடம்:

நட்சத்திரம் இதற்கான சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும்.

திருவோணம்:

நட்சத்திரம் இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவர் சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.

அவிட்டம்:

நட்சத்திரம் இதற்கான சித்தர் திருமூலர் ஆவார். இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி உள்ளது.

சதயம்:

நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர் ஆவார். இவரின் சமாதி இங்குதான் என வரலாறு தெளிவாக குறிக்கவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது.

பூராட்டாதி:

நட்சத்திரம் இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார். தனித்து சமாதி என்று குறிப்பிடும்படியாக தெரிவிக்கவில்லை.

உத்திரட்டாதி:

நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டதென வரலாறு கூறுகிறது. இவரை சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையில் ஒலியாக வந்து இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம்.

ரேவதி:

நட்சத்திரம் இதற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது,

மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள். நிச்சயம் அவர்கள் அருளை தர தவறமாட்டார்கள். உங்களிடம் உள்ள பாவ கர்மாவிற்கு தயங்கி தெய்வம் துணைக்கு எளிதில் வரமாட்டார்கள்.

ஆனால் சித்தர்கள் அவ்வாறில்லை. தன்னை அழைத்தவர்களுக்கு எதாவது ஒரு வழியில் வழிகாட்ட தயங்கமாட்டார்கள். எனவே ஒரு தினத்தில் சில நிமிடங்களையாவது சித்தர் வழிபாட்டிற்கு செலவிடுங்கள். சித்தர் பூஜை செய்பவர்கள் நீத்தாருக்கு திதி பார்த்து தெவசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தது சித்த தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒரு நிலையில் அமர வேண்டும். இந்த வழிமுறையை கடைபிடித்து உங்கள் கஷ்டத்தையும், வறுமையையும் போக்கிக்கொள்ளுங்கள்

 சித்தர்கள்  அவர்களுடைய மருந்து முறை, நமது நாட்டு வானிலைக்கும் மக்கள் பண்புக்கும் ஏற்ற முறையில் அமைந்திருந்தது. தவிர மற்ற முறைகளில் இல்லாத சில தனிச் சிறப்புகளும், சித்தர்கள் கண்ட அனுபவ மருத்துவ முறைகளில் காணப்பட்டன.

இயற்கையில் நாம் காணும் நிலைகளை அவர்கள் நமது உடலிலும் உணர்ந்தார்கள். "வெளியே உலாவும் காற்று நமது உடலிலும் உலாவுகிறது. வெளியே காணும் வெப்பம் நமது உடலையும் பாதிக்கக் கூடியது. வெளியே உணரும் குளிர்ச்சி, நமது உடலிலும் கபமாகத் தோன்றக் கூடியது" என்று தத்துவங்களை எழுதி வைத்திருக்கிறார்கள்.

அவர்களுடைய முறைப்படி மனித உடல் 96 தத்துவங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில், ஆன்மாவின் ஆட்சியில் 24 சக்திகள் இருந்ததையும் அவர்கள் உணர்ந்திருந்தார்கள். நமது உடலை 72,000 ரத்தக் குழாய்களும், 13,000 நரம்புகளும், 10 முக்கிய தமனிகளும், 10 வாயு அமைப்புகளும் கொண்டதாக அவர்கள் சொன்னார்கள். இந்த அடிப்படையில் 96 வகைத் துடிப்புகளை உணர்ந்து, நாடி மூலம் வைத்தியம் செய்யும் வகையையும் குறிப்பிட்டிருந்தார்கள்.

சமயத்துக்கு மிகச் சிறந்த தொண்டு செய்த ஞானிகளாகிய சித்தர்கள், மனித உடலின் நலனுக்காக மிக உன்னதமான மருத்துவ முறையையும் எழுதிவைத்தார்கள். அகத்தியர், திருமூலர், சட்டநாதர், இடைக்காடர், மச்சமுனி, புலிப்பாணி, கொங்கணர் போன்ற சித்தர்கள் இவ்வாறு வகுத்துக் கொடுத்துள்ள மருத்துவ சாத்திரம் மிக அருமையானது. இன்று நாம் உபயோகிக்கும் பல்வேறு இயந்திரங்கள், கருவிகள் ஆகியவற்றின் துணை ஏதுமின்றி, அவர்கள் கண்ட மருத்துவ அடையாளங்களும், வியாதிக்கான நிவர்த்திகளும் ஆச்சர்யமானவை. தேகத்தின் சூடு, உடலின் நிறம், நாக்கின் நிறம், குரல், கண்களின் பார்வை, மலஜலம் ஆகியவற்றின் தன்மை இவற்றை நாடித் துடிப்புடன் ஒப்பிட்டு,   உன்னதமான சிகிச்சை முறைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

நாடியை உணரும் முறை

நாடியை உணருவதற்குச் சுட்டுவிரல், கட்டைவிரல், மோதிர விரல் ஆகிய மூன்றும் பயன்பட்டன. வாயு, பித்தம், சளி ஆகியவை இதன் மூலம் கணிக்கப்பட்டன. கைரேகை பார்ப்பதைப் போலப் பெண்களுக்கு இடது கையும், ஆண்களுக்கு வலது கையும் ஆய்ந்து அறியப்பட்டன. பூதநாடி, குருநாடி, ஆகியவைகளே நுட்பமாகக் கண்டறிய உதவின.  மூளைக்கோளாறு, மனோவியாதி போன்றவற்றைக் கண்டறிய பூதநாடி பயன்பட்டது. சிக்கலானப் பிற வியாதிகளைக் கண்டுபிடிக்க குருநாடி பயன்படுத்தப்பட்டது. இவற்றை உபயோகிக்கத் தன்னலம் இல்லாத பண்பும், குருவின் அருளும், ஆன்மஞானமும், குருவிடம் நீண்டகாலம் சிகிச்சை முறைகளைப் பயிலும் அனுபவமும் தேவை என்பது குறிப்பிடப்பட்டது. உடலைப் பற்றியதானாலும் உள்ளத்தின் மேன்மையைச் சித்தர்கள் பெரிதும் வலியுறுத்தினார்கள் என்ற அபூர்வப் பண்புக்கு இதுவே சான்றாகும்.

சித்த மருத்துவத்தில் ஜோதிடத்தின் பங்கு

 வேத நூல்களின் முக்கியமான அங்கமாகிய ஜோதிடக் கலை,  மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்பட்டது. வெவ்வேறு கிரக நிலைகளில், வெவ்வேறு லக்கினங்களுக்கு உரியவர்களுக்கு, உடம்பின் இன்னென்ன பகுதிகள் பாதிக்கப்படும் என்ற தத்துவத்தை அவர்கள் கணக்கிட்டு, அந்த அடிப்படையில் வைத்தியம் செய்ய உலோகங்களையும், ரத்தினக்கற்களையும் பக்குவம் செய்து உபயோகித்தார்கள். ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை 100 ஆண்டுகள் என்றும், அவற்றில் 30 ஆண்டுகள் வாயு, 33 ஆண்டுகள் பித்தம், 37 ஆண்டுகள் கபம் என்று பிரிக்கப்பட வேண்டியவை என்றும் அவர்கள் கணக்கிட்டார்கள். இதேபோல, ஒரு நாளின் பகுதிகளும் மூன்றாகப் பிரிக்கப்பட்டன. இப்படி அவர்களுடைய வைத்திய முறை இயற்கையின் சக்திகளை ஒட்டியதாகவே அமைந்திருந்தது.

 மனித உடலில் 4448 வியாதிகள் வரக்கூடும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள். நுட்பமான எல்லா வியாதிகளுமே இந்தக் கணக்கில் வந்துவிடுகின்றன. வெவ்வேறு விதமான 32 களிம்புகளைத் தடவுவதன் மூலமும், 26 உள்ளுக்குச் சாப்பிடக் கூடிய மருந்து வகைகளின் மூலமாகவும் அவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. மிக அபூர்வமாகவே அறுவை சிகிச்சை முறை கையாளப்பட்டது. சித்தர்களின் வைத்திய முறையில் மூன்று அங்கங்கள் உண்டு. முனிவர்கள் உணர்ந்து அளித்த

யோகம், பிராணாயாமம் போன்றவற்றின் மூலம் மூலிகைகளைப் பயன்படுத்திக் கட்டுப்பாடாக வாழ்வது, ஆரம்ப நிலையிலேயே உடற்குறைகளைக் கண்டறிந்து அவற்றை அறவே நீக்கும் முறைகளைப் பின்பற்றுவது, கொடிய வியாதிகளின் கடுமையை இயன்றவரையில் குறைப்பது ஆகிய மூன்றுமே அந்த முக்கியமான அம்சங்களாகும்.

சித்த மருத்துவ முறையைக் கற்றுணர்பவர்களுக்கு ரசவாதம், பௌதிகஞானம், வான்கணிதம் ஆகியவைகளும் தெரிந்திருக்க வேண்டும். இந்த முறையை பயிலுபவர்களுக்கு மனப்பக்குவமும், தொண்டு செய்யும் மனப்பாங்கும் இருக்க வேண்டும். அவர்கள் தயாரிக்கும் மருந்துகளில் மூன்றில் ஒரு பங்கு உறவினர் - நண்பர்களுக்காகவும், இரண்டாவது பங்கு ஏழை எளியவர்களுக்கு தர்ம வைத்தியம் செய்வதற்காகவும், மூன்றாவது பங்கு வியாபார முறையிலும் பயன்படுத்த வேண்டும். டானிக்குகளை உபயோகிக்குமுன் வைத்தியன், தானே அதைச் சாப்பிட்டு உணர்ந்து, பிறகு நோயாளிகளுக்குக் கொடுக்க வேண்டும். எந்த வியாதியையும் மூன்றே நாட்களில் குணப்படுத்திவிட வேண்டும்.

சித்த வைத்திய முறைகள் இயற்கையை ஒட்டியவை. உடலின் 4448 வியாதிகளுக்கு அவர்கள் 4448 வித மூலிகைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். மூலிகைச் சத்து, உலோகங்களிலிருந்து ஸ்புடம் போட்டுத் தயார் செய்த பஸ்மங்கள், செந்தூரங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. மருந்துகளை உபயோகிக்கும்போதே, அவை உடலைப் பாதுகாத்து வளப்படுத்தும் டானிக்குகளாகவும் பயன்பட்டன. இன்று குணப்படுத்த முடியாத புற்றுநோய் போன்ற நோய்களுக்கும் சித்த வைத்திய முறையில் சிகிச்சை செய்யலாம் என்றூ சித்தர்கள் கண்டறிந்தார்கள். தேனை மட்டும் கொம்புத்தேன், புற்றுத்தேன், மாப்பொந்துத்தேன், வீட்டுத்தேன், பழையதேன், புதியதேன் என்று 60 வகைகளாக அவர்கள் பிரித்து உபயோகப்படுத்தினார்கள். மருந்துகளுடன் பழைய தேனை உபயோகிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் இருந்தது. பூஜைக்கு உரிய வில்வம், துளசி போன்றவைகளும் சித்தர்களின் மருத்துவ முறையில் பயன்படுத்தப்பட்டன. அதற்கென்றும் சில விதிமுறைகளை அவர்கள் வகுத்திருந்தனர்.

சித்த மருத்துவத்தில் மூலிகைகளின் பங்கு

பூஜைக்குப் பயன்படும் மகாவில்வ தளம், துளசிதளம் போன்றவை சிகிச்சைக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டன. மூலிகைகள் வளரும் மண், அவை பறிக்கப்படும் நேரம், பறிக்கும் முறை எல்லாவற்றுக்குமே விதிகள் இருந்தன. காற்றில் ஏற்படும் அசுத்தங்களை ஹோமங்கள் செய்வதன் மூலம் நீக்கலாம் என்று நம் முன்னோர்கள் கண்டறிந்திருந்தார்கள். நாயுருவி (பாதரசம்), எருக்கு ( சூரியன் ), பலாசம் ( சந்திரன் ), வன்னி ( சனி ), அருகம்புல் ( குரு - ராகு ), தர்ப்பை ( கேது ) போன்ற ஹோமத்துக்கு உரிய பொருட்கள், சிக்கலான மருத்துவ முறைகளுக்கும், உரியவை என்பது அவர்கள் கண்டறிந்த தத்துவம் ஆகும்.

உலோகங்கள், ரத்தினங்கள், மிருகங்களின் கொம்புகள் போன்ற இயற்கையான பொருட்களைக்கொண்டு பக்குவம் செய்து பஸ்மங்கள் தயார் செய்யப்பட்டன. நெருப்பில் உருக்குவது, புடம் வைப்பது, காய்ச்சுவது, வடித்தெடுப்பது ஆகிய முறைகளால் இவைகள்  தயார் செய்ய பயன்பட்டன. பலவகையான நச்சுப் பொருட்களும் மருந்து செய்ய பயன்பட்டன. இந்த அபூர்வ சிகிச்சை முறைகளை அரேபியா, சைனா, துருக்கி, எகிப்து போன்ற வெளிநாடுகள் பலவற்றுக்கும் சித்தர்களும் போகர்களும் பரப்பி இருக்கிறார்கள்.

பூஜைக்கு உரிய பசுவின் சாணம் புடம் போடவும் பயன்படுத்தப்பட்டது. பூஜை செய்யப்பட்ட பசுவின் சாணம், இளங்கன்றுக்குப் பால் கொடுக்கும் பசுவின் சாணம், சிவன் கோயிலில் வளர்க்கப்படும் பசுவின் சாணம் என்று இவை தரம் பிரிக்கப்பட்டன. இவற்றிலிருந்து சாஸ்திரீயமான முறையில் வறட்டிகள் தட்டப்பட்டு, பக்குவத்துக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டன.

ரசவாதம் பணம் சம்பாதிக்கும் முறையாகப் பயன்படுத்தப்படவில்லை. உடலின் உறுப்புகளைப் புதுப்பிக்கவும், நீண்ட ஆயுளைக் கொடுக்கவும், மூப்பை நீக்கி மீண்டும் இளமையைத் தரவும் பயன்பட்டன. காயகல்பம் என்ற மருத்துவமுறை இவ்விதம் இளமையை மீட்டுத் தரவல்லது. இரும்பு போன்ற உலோகம் தங்கம் போன்ற உலோகமாக மேன்மையுறச் செய்யும் பக்குவத்தைக் கண்டறிந்து, அவர்கள் மனிதப் பண்புகளையும், மேம்படச் செய்தார்கள். அற்புதங்களை நிகழ்த்தும் மந்திர முறைகள், விஷங்களைப் போக்கவும் பயன்பட்டன.

மனித உடலில் பஞ்சபூதங்களின் விகிதாசாரம்

இயற்கையில் உள்ள பஞ்சபூதங்களான ஆகாயம், நெருப்பு, காற்று, நீர், மண் ஆகியவை நமது உடலிலும் இருக்கின்றன. ஆகாயம் உடலில் மறைபொருளாக அரைப்பங்கு இருக்கிறது. நெருப்பு, காற்று, நீர், மண் ஆகியவை ஒவ்வொன்றும் அரைக்கால் பங்கு இருக்கின்றன. இந்த ஐந்து இயற்கைப் பொருட்களும் இந்த விகிதப்படி இருந்து வர வேண்டும். மண் நிறைந்துள்ளவை - கேசம், தோல், சதை, எலும்பு, நரம்பு ஆகியவை. நீர் நிறைந்துள்ளவை - கொழுப்பு, இரத்தம், பித்தம், கழிவுநீர், ஆகியவை. நெருப்பு நிறைந்துள்ளவை - பசி, தாகம், தூக்கம், சோம்பல், மேனி அழகு ஆகிய பண்புகள். வாயு நிறைந்துள்ளவை - அசைவு, சுருக்கம், விரிவு ஆகிய தன்மைகள். ஆகாயம் நிறைந்துள்ளவை - வயிறு, இருதயம், மூளை ஆகியவற்றிலுள்ள இடைவெளிகள். இவற்றை சித்தர்களின் சாஸ்திரப்படி கண்டறிந்த முனிவர்கள், மருந்துகள் ஏதுமில்லாமலே வியாதி இன்றி வாழ முடிந்தது. உணவு உட்கொள்ளாமலே பசியும் தாகமும் இன்றி வாழ முடிந்தது. நெருப்பில் நிற்பது, நீர் மேல் நடப்பது, காற்றில் பறப்பது போன்ற அபூர்வச் சித்து வேலைகளையும் நிகழ்த்த முடிந்தது.

உடலின் உறுதியையும், உள்ளத்தின் மேன்மையையும் பாதுகாக்க, இச்சைகளை அடக்க வேண்டும் என மெய்ஞ்ஞானம் கூறுகிறது. இதையே சித்த சாஸ்திரமும் உணர்த்துகிறது. பிராணயாமம், யோகாப்பியாசம் ஆகியவற்றின் மூலம் உடலில் ஏற்படக்கூடிய அசுத்தங்களை நீக்கும் வழிமுறைகளையும் அவர்கள் கண்டறிந்தார்கள். சாவு நேரிடும் வரையில் நரம்பு தளர்ச்சி, நரை, சுருக்கம் விழுதல் ஆகியவை இன்றி வாழும் ரகசியத்தை சித்தர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால் அப்படிப் பாதுக்காத்த உடலின் ஆரோக்கியத்தை இறைவனை எண்ணித் தியானம் செய்யவும், இறைவன் படைத்த உயிர்களைக் காக்கவுமே பயன்படுத்தினார்கள். உடலையும், உள்ளத்தையும் காக்க உணவுக் கட்டுப்பாடுகள், விரதங்கள் ஆகியவற்றைக் கடைப்பிடித்தார்கள். ஆலயங்களை ஒட்டியும், மூலிகைகள் நிறைந்த காடுகளிலுமே, உலக பற்றின்றி உத்தமர்களாக வாழ்ந்தார்கள்.

இன்றைய மருத்துவ விஞ்ஞானத்தின் அடிப்படையே சித்தர்களின் மருத்துவ முறையில்தான் அமைந்திருக்கிறது. அவர்களுடைய பாடல்களில் தமிழ் மொழியின் வளம் நிறைந்திருக்கிறது.

நன்றி

மாலை மலர் .

No comments:

Post a Comment